
கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளின் கூலி உயர்வு மற்றும் உரிமைக்காகப் போராடி, சிறை சென்ற தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஈசன் முருகசாமி, இன்று பிணையில் விடுதலையாகித் திரும்பியபோது அவருக்குப் போச்சம்பள்ளி அருகே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தனியார் கறிக்கோழி நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த ஜனவரி மாதம் திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் போலீசாரால் ஈசன் முருகசாமி கைது செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவின்படி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், சட்டப் போராட்டத்திற்குப் பிறகு இன்று விடுதலையானார். சிறையிலிருந்து தனது சொந்த ஊருக்கு காரில் சென்றுகொண்டிருந்த ஈசன் முருகசாமியை, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மணியேகர் பங்களா பகுதியில் விவசாயிகள் சங்கத்தினர் வழிமறித்துச் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
மாநில மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் நாகராணி தலைமையில் இந்த வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.
ஈசன் முருகசாமிக்கு மாலை அணிவித்தும், அவருக்குப் பெண்கள் ஆர்த்தி எடுத்தும் வரவேற்றனர். மேலும், இந்த மகிழ்ச்சியான தருணத்தைக் கேக் வெட்டிக் கொண்டாடினர்.
மாவட்டச் செயலாளர்கள் கணேஷ் ரெட்டி, டிவி. சேகர்
மேற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்டத் தலைவர் சுப்பிரமணி
நிர்வாகிகள் அன்பழகன், சங்கர்
மாவட்ட இளைஞரணி செயலாளர் புகழேந்தி
மேலும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் மற்றும் விவசாயிகள் திரளாகப் பங்கேற்று அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
