கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரியில், பள்ளி மாணவர்களுக்கான மாதிரி நாடாளுமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராககோவை, மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், கலந்து கொண்டு துவங்கி வைத்தார்

இளம் தலைமுறையினரிடம் ஜனநாயக விழிப்புணர்வு, குடிமைப் பொறுப்பு மற்றும் தலைமைத்துவ பண்புகளை வளர்க்கும் நோக்கில், சிஐஐ மற்றும் யங் இந்தியன்ஸ் இணைந்து, “யங் இந்தியன்ஸ் நாடாளுமன்றம் 3.0 ” நிகழ்ச்சியை கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரி வளாகத்தில் நடத்தியது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாதிரி நாடாளுமன்ற நிகழ்ச்சியில், கோவை மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 14 பள்ளிகளில் இருந்து 109 மாணவர் பிரதிநிதிகள் பங்கேற்று, இந்திய நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளின் விவாதங்கள், சட்டமசோதா கலந்துரையாடல்கள் மற்றும் கொள்கை வடிவமைப்பு அமர்வுகளில் பங்கேற்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், தொடங்கி வைத்தார். குமரகுரு பொது மற்றும் போட்டித் தேர்வு மையம், குமரகுரு பன்முக கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசியல் அறிவியல் துறை மற்றும் யங் இந்தியன்ஸ் கோவை கிளை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது.
இந்த போட்டியில் சிறப்பாக செயல்படும் 15 மாணவர்கள் பிராந்திய சுற்றுக்கு தகுதி பெற்று, பின்னர் புதுதில்லியில் நடைபெறும் தேசிய இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவர். நாளை நடைபெறும் நிறைவு விழாவில் கோவை மக்களவை உறுப்பினர் டாக்டர் கணபதி ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், இந்திய அரசியலமைப்பின் மிக முக்கியமான தூண் நாடாளுமன்றம் என்றும், எதிர்கால தலைவர்களாக உருவாக மாணவர்கள் கேட்கும் திறன், பொறுமை, பரஸ்பர மரியாதை மற்றும் பச்சாதாப உணர்வு ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில்,
யங் இந்தியன்ஸ் கோவை கிளை தலைவர் ராகுல் காமத், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.