கொடைக்கானலில் போலி டாக்டரிடம் சிகிச்சை பெற்ற இளம்பெண் மரணம், குழந்தை பிறந்த 20 நாளில் சோகம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகிலுள்ள கவுஞ்சி ராஜபுரத்தைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி (24 வயது). இவருக்கு 1 ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில் மீண்டும் பிரியதர்ஷினிக்கு 20 நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு அவர் வீடு திரும்பினார். சில நாட்களிலேயே பிரியதர்ஷினிக்கு வயிற்று வலி ஏற்படவே அதே பகுதியில் மருந்தகம் நடத்தி வரும் நபரிடம் சிகிச்சைக்கு சென்றார். அவருக்கு மருந்து மாத்திரைகளை பிரின்ஸ் வழங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும்வயிற்று வலி ஏற்படவே பிரின்ஸ்சிடம் சிகிச்சைக்கு வந்துள்ளார். அவர் வலி குறைவதற்காக அதிக வீரியம் கொண்ட ஊசியை அவருக்கு செலுத்தினார். சற்று நேரத்தில் பிரியதர்ஷினிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது உடனடியாக கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தபோது அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கொடைக்கனால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் பிரியதர்ஷினி உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முறையான மருத்துவம் படிக்காமல் தனது வீட்டிலேயே கிளீனிக் போல நடத்தி அப்பகுதி மக்களுக்கு மருந்து மாத்திரை கொடுத்து வைத்தியம் பார்த்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
தற்போது மருத்துவரின் சிகிச்சையால் ஒரு பெண் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு போலீசார் மற்றும் மருத்துவ துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.