
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்று காலை சுமார் 7.40 மணியளவில், விழுப்புரம்- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் செம்மாங்குப்பம் பகுதியைக் கடக்கும்போது, ஒரு பள்ளி வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இது ஆளில்லா ரயில்வே க்ராஸிங் அல்ல. பள்ளி வாகனத்தில், ஓட்டுநர் மற்றும் 4 மாணவர்கள் இருந்துள்ளனர். சம்பவ இடத்தில் ஒரு மாணவர் இறந்துவிட்டார். மூன்று குழந்தைகளும், ஓட்டுநரும் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அதில் மருத்துவமனையில் ஒரு மாணவி உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வருகின்றன. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.
அவர் அளித்த தகவலின் படி, நிவாஸ் (வயது 12) என்ற மாணவரும், சாருமதி (வயது 16) என்ற மாணவியும் உயிரிழந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செழியன் என்ற மாணவனும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
