
இந்தியாவில் தனி மனித சித்திரவதைகளுக்கு எதிராக தனி சட்டம் இல்லாத நிலையில், 1997-ல் ஐ.நா. உடன்படிக்கையை இந்தியா ஏற்றுக்கொண்டும், இதுவரையிலும் உள்நாட்டுச் சட்டமாக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பி.சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
கோயமூத்தூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சித்திரவதை குறித்த அரசியல் நிர்ணய சட்டப் பார்வை என்ற தலைப்பில் வியாழக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பி. சுந்தரராஜன் உரையாற்றினார். அவர் கூறியதாவது..
அரசு நிர்வாகத்தின் மூலம் சித்திரவதைக்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. முதலில் எதிரி நாட்டு மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட சித்திரவதை, இன்று தன் நாட்டு மக்களையே அடக்கி, அதிகாரத்தைத் தக்கவைக்கப் பயன்படுத்தப்படுகிறது.
ஐ.நா. சித்திரவதை எதிர்ப்பு உடன்படிக்கையின்படி, அரசு அல்லது அதன் அதிகாரிகள் மூலம் மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்வது குற்றமாகும். இதன் விளைவுகள் உடல், மன ரீதியாகப் பேரழிவை ஏற்படுத்துவதுடன், சமூகத்தை அச்சத்திற்கு உள்ளாக்கி, சுதந்திர சிந்தனையையும் முன்னேற்றத்தையும் தடுக்கிறது.
இந்தியாவில் தனி சட்டம் இல்லாத நிலையில், 1997-ல் ஐ.நா. உடன்படிக்கையை இந்தியா ஏற்றுக்கொண்டும், இதுவரை உள்நாட்டுச் சட்டமாக்கப்படவில்லை. 2010, 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் தடுப்புச் சட்ட மசோதாக்கள் கொண்டுவரப்பட்டும் நிறைவேற்றப்படவில்லை. காவல்துறையின் என்கவுன்டர்கள் சட்டவிரோத காவல், தடுப்பு ஆகியவை சரியாக விசாரிக்கப்படுவதில்லை. தேசிய மனித உரிமை ஆணைய வழிகாட்டுதல்கள் கூட அமல்படுத்தப்படவில்லை என்றார். அரசியல் சட்டப் பார்வை
அரசியல் சட்டம் மனித உரிமைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டது. உறுப்பு14 சமத்துவ உரிமை, உறுப்பு 20 குற்றங்களுக்கான தண்டனை நடைமுறை, உறுப்பு 21 உயிர் மற்றும் தனிப்பட்ட சுதந்திர உரிமை ஆகியவை, காவல் நிலையங்களில் நடைபெறும் சித்திரவதை, வற்புறுத்தல் வாக்குமூலம், இரட்டை ஆபத்து தடுப்பு உள்ளிட்ட உரிமைகள் மீறப்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கின்றன.
அதிகாரத்தில் உள்ளோர் சட்டத்தை மீறி சமூகத்தை நிலைநாட்ட வேண்டும் என்பது புதிய கோட்பாடாகிவிட்டது. மனித உரிமைகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை எனும் போக்கு உள்ளது. வளர்ச்சிக்காகச் சுற்றுச்சூழலைப் பலியிடும் அணுகுமுறையும், அதிகார வர்க்கம் தங்களை மட்டும் பாதுகாத்துக் கொள்ளும் மனப்பான்மையும் அதிகரித்துள்ளது.
சர்வதேச அளவில் இந்தியாவின் மனித உரிமைப் பதிவு காரணமாக, பல நாடுகள் இங்கிலாந்து உள்ளிட்ட இந்தியர்களை நாடு கடத்த மறுக்கின்றன.
இது ஒரு குறிப்பிட்ட ஆட்சியின் பிரச்னை அல்ல, எல்லா ஆட்சிகளிலும் தொடரும் பிரச்னை தொடர்கிறது. தனிமனித சித்திரவதையைத் தடுக்க சட்டரீதியான நடவடிக்கைகள் அவசியம் என்றார்
இந்நிகழ்வில் கோவை வழக்கறிஞர்கள் சங்க மனித உரிமை பிரிவு அமைப்பாளர் வி.பி.சாரதி, தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன், செயலாளார் கே.சதீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
