ராமநாதபுரம் மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளருக்கு சேவை செம்மல் விருது

ராமநாதபுரம்,டிச.12:-

ராமநாதபுரம் மாவட்ட அறம் விழுதுகள் அறக்கட்டளை தலைவர் கல்வியாளர் திமுக மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் டாக்டர்.முஹம்மது சலாவுதீன்.இவர் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறார்.மேலும் கல்வி,சமூக சேவைகள் போன்ற பல்வேறு மக்கள் பணிகளை செய்து வருகிறார்.இவரது சேவையை பாராட்டி ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி கல்வி ரத்னா,நம்பிக்கை நட்சத்திரம் விருதுகள் வழங்கியுள்ளார்.மேலும் இவருக்கு கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் கிரீன் சாம்பியன் பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்பட்டது.ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா போன்ற நிகழ்ச்சிகளில் கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார்.இவரை பாராட்டும் விதமாக தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு சார்பில் சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில் சேவை செம்மல் விருது வழங்கி உள்ளனர்.அரசின் தாட்கோ நிறுவன மேலாண்மை இயக்குனர் கந்தசாமி அந்த விருதை வழங்கினார். விழாவில் வனத்துறை அலுவலர் சரவணன்,நல அமைப்பின் இயக்குனர் கேஷிகா மனோகர்,சென்னை ஐஐடி பேராசிரியர் ஹரிஹரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து முஹம்மது சலாவுதீன் கூறியதாவது:-

வறட்சி மாவட்டமான ராமநாதபுரத்தில் பசுமை சூழலை ஏற்படுத்த அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு வருகிறோம்.முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவுரைகளை பின்பற்றி அரண் விழுதுகள் அறக்கட்டளையை உருவாக்கி பல்வேறு உதவிகளை செய்து வருகிறோம்.இந்த விருது கிடைத்திருப்பது உள்ளபடியே மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.