
கோவை மாவட்ட கிக் பாக்சிங் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் மற்றும் தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் இணைந்து, மாவட்ட அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவை, குனியமுத்தூர் பகுதியில் உள்ள பிரேம் எம்.எம்.ஏ. அகாடமி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் கோவை கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இளம் வீரர், வீராங்கனைகள் உற்சாகமாக பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
ஆறு வயது முதலான பள்ளி மாணவர்கள் துவங்கி 20 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் வரை பல்வேறு வயது மற்றும் எடைப்பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
வீரர்களின் தைரியம், கட்டுப்பாடு மற்றும் நுட்பமான தாக்குதல்-தடுப்பு திறன்கள் என நடைபெற்ற கிக் பாக்சிங் போட்டிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.
இது குறித்து கோவை மாவட்ட கிக் பாக்சிங் விளையாட்டு சங்க நிர்வாகிகள் பிரேம் குமார், பிராங்க்ளின் பென்னி,மற்றும் புகழேந்தி ஆகியோர் கூறுகையில்,கிக் பாக்சிங் விளையாட்டில் இளம் வயதினரின் ஆற்றலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் விதமாக போட்டிகள் நடைபெற்றதாகவும், அனைத்து விதமான பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு, பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்களின் கண்காணிப்பில் போட்டிகள் ஒழுங்காக நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்..
இதில் தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகள் விரைவில் தேனியில் நடைபெற உள்ள மாநில அளவிலான கிக் பாக்சிங் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஆஸ்ரம் பள்ளி நிர்வாகி கவுரி உதயேந்திரன் கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். மேலும், விளையாட்டு ஒழுக்கம் மற்றும் உடற்தகுதி வளர்ச்சியில் கிக் பாக்சிங் போன்ற விளையாட்டுகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
இதன் மூலம் மாவட்டத்திலிருந்து மாநில மட்டத்துக்கு முன்னேறும் திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்குவது நோக்கமாக உள்ளதாகவும் கூறினர். போட்டியை வெற்றிகரமாக நடத்த உதவிய நடுவர்கள், பயிற்சியாளர்கள், பெற்றோர் மற்றும் தன்னார்வலர்களுக்கு அமைப்பாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வு கோவை மாவட்டத்தில் கிக் பாக்சிங் விளையாட்டின் வளர்ச்சிக்கு புதிய ஊக்கமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது..
