
திருப்பத்தூர், நவ. 16-
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அவ்வை நகரைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் மகன் ராஜன் (35). இவர் கடந்த 2013ம் ஆண்டு ஒரு கொலை கைதாகி 2016ம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து கோயம்புத்தூருக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் கோயம்புத்தூர் சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமாருக்கும், ராஜனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் ராஜனுக்கு ஸ்லோ பாய்சன் வைத்து ஒரு வாரத்திற்குள் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டி வருவதாக தெரிகிறது.
இதனால் பயந்து போன ராஜன் நேற்று திருப்பத்தூர் நீதிமன்றத்திற்கு வாய்தாவிற்கு வந்தபோது நீதிமன்ற வளாகத்தில் கத்தி கதறினார். அப்போது தனக்கு கோவை சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். இதன் காரணமாக தன்னை வேலூர் மத்திய சிறைக்கு மாற்ற வேண்டும். இல்லை என்றால் என்னை கொன்று விடுவார்கள் என கதறினார். இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. பின்னர் போலீசார் அவரை கோவை சிறைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து ராஜனின் மனைவி ஆர்த்தி நீதிமன்ற வளாகத்தில் நிருபர்கள் சந்தித்து கூறியது: எனது கணவர் ராஜனுக்கு கோவை சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமாரால் உயிருக்கு ஆபத்து உள்ளது. அவர் எனது கணவரை ஸ்லோ பாய்சன் வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகிறார். அதனால் எனது கணவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. முதல்வர் இது தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது கணவர் தற்போது திரும்பி வாழ்கிறார். அடிக்கடி கோவை சிறைக்கு சென்று எனது கணவரை சந்திக்க முடியாமல் உள்ளதால் அவரை வேலூர் சிறைக்கு மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். வக்கீல் ஜெகதீஷ் கூறுகையில்: கடந்த 10 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் ராஜன் சக கைதி நாகராஜன் உதவ சென்று ஆபத்தில் மாட்டி உள்ளார். அதனால் எஸ்பி அவரை கொலை செய்து விடுவேன் என மிரட்டி வருகிறார். லெஸ்பியன் தகாத செயலால் ராஜனின் உயிருக்கு ஆபத்து உள்ளது. அதனால் திருப்பத்தூருக்கு அருகில் உள்ள சேலம் அல்லது வேலூர் சிறைக்கு ராஜனை இடமாற்றம் செய்ய வேண்டும். மேலும் ராஜனுக்கும் போலீசாருக்கும் ஏற்பட்ட மோதல் வழக்கை உடனடியாக முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜனின் உயிருக்கு எந்த வித ஆபத்து ஏற்படாத வகையில் அவருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
