கோவை உப்பிலிபாளையத்தில் பக்தி வெள்ளம்…அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயிலில்மகா கும்பாபிஷேக பெருவிழா கோலாகலம்..!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமையான அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக பெருவிழா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.மகா கும்பாபிஷேக பெருவிழா
அறக்கட்டளை தலைவர் கே. சந்திரசேகரன் தலைமையிலும், செயலாளர் வழக்குரைஞர் ஜெயசந்திரன், பொருளாளர் வனவாசன், துணைத்தலைவர்கள் கோபாலகிருஷ்ணன் மற்றும் உதயகுமார் ஆகியோர் முன்னிலையிலும் விழா சிறப்பாக நடைபெற்றது.
பழமை மிக்க இந்த ஆலயத்தில் பல கட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதிய ராஜகோபுரம், கருவறை, கல் மண்டபம், வசந்த மண்டபம், ராஜராஜேஸ்வரி சிலை உள்ளிட்ட பல்வேறு புதிய அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் காலை 9.30 மணி முதல் 10.15 மணி வரை சுவாதி நட்சத்திர நேரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருப்பேரூராதீனம் மற்றும் சிரவை ஆதீன அடிகளார்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் கலசங்களில் இருந்து கோபுர கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனை முன்னிட்டு கடந்த 27ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள், கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து தினமும் பக்தர்களுக்காக அன்னதானமும் வழங்கப்பட்டது.
இவ்விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற பவளக்கொடி கும்மி ஆட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட தமிழர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் பக்தர்கள் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தன.
இந்த மகா கும்பாபிஷேக பெருவிழாவில் அன்னதானக்குழு பொறுப்பாளர்கள் தனலட்சுமி மோகன் சுந்தர்,ஜெபராஜ் (அண்ணாச்சி) விழாக்குழுவினர், கௌரவ ஆலோசகர்கள், சிவராம நாயக்கர் குட்டியம்மாள் வாரிசுகள் குடும்பத்தார்,சஷ்டிக் குடும்பத்தார்,சிவானி குடும்பத்தார், கோயில் பூசாரிகள், கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருளைப் பெற்றனர்.