தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் உள்ள 75,064 வாக்குப்பதிவு மையங்களிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை இடைவிடாமல் நடைபெறுகிறது. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க மாநிலம் முழுவதும் 1.4 லட்சம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதம் 10ம் தேதி முடிவடைகிறது. இதையொட்டி தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சிமற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அடங்கும்.

இந்நிலையில், தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ந்து 11 மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று தேர்தல் நடைபெறுவதையொட்டி, தமிழகத்தில் மொத்தமுள்ள 75,064 வாக்குப்பதிவு மையங்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தலில் பயன்படுத்தும் அழியாத மை உள்ளிட்ட பொருட்கள் உள்ளிட்டவைகள் துப்பாக்கி பாதுகாப்புடன் நேற்று மதியம் முதல் எடுத்து செல்லப்பட்டு அந்தந்த வாக்குப்பதிவு மையங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.